தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் எழுச்சித்தமிழர் பேசியதாவது:-


தீபாவளி அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தலித் மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் ஆனந்தூர் அய்யனார் என்ற வாலிபர் ஜாதி வெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். பிரணபுரியில் சொல்வழகன் கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 26 இடங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 7 இடங்களிலும் அப்பாவி தலித்துகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பண்ருட்டி அருகே காட்டுபுலியூரில் கடந்த 6 மாதமாக தொடர் தாக்குதலுக்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

குடிசைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றனஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தீபாவளி பண்டிகை தினத்தில் மதுரை அருகே 50 குடிசைகள் சூறையாடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தலித் மக்கள் மீது ஜாதி வெறி கும்பல்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இச்சம்பவங்கள் அனைத்தும் குடிபோதையில் நடந்ததாக கூறப்படுகிறது. குடிசை பகுதிகளில் மதுக்கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. தீவிர மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்போடு உள்ளது.

எனவே குடிசைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில்  சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., வன்னிஅரசு, இளஞ்செழியன், வீரமுத்து, கபிலன், இரா.செல்வம் ,கலை கோட்டுதயம், சேகுவேரா உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக