தலித் பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணி மீது கொலை வெறித்தாக்குதல் : தொல்.திருமா ,ஜான் பாண்டியன் கண்டன ஆர்ப்பாட்டம்




தாழையுத்து ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கிருஷ்ணவேணி அவர்களை சாதிவெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தாழையுத்து நகரில் 23 .7 .11 அன்று நற்பகல் 1 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றன  .

இந்த ஆர்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மற்றும் ஆதித்தமிழர் பேரவையை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விடுதலைச்சிறுத்தைகள் நெல்லை மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கதிரவன், தமிழக  மக்கள் முன்னேற்ற கழகம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றிய பின்னர் , 

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கண்டனயுரை நிகழ்த்தினார். நிறைவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்.பாண்டியன் அவர்கள் கண்டனயுரை  நிகழ்த்தினார். தொல்.திருமா மற்றும் ஜான்.பாண்டியன் ஆகிய இருவரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டது அந்த வட்டாரத்தில் மிக பரபரப்பு ஏற்படுத்தியது, இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கருதிய காவல்துறையினருக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கலாம். எராளமான அளவில் காவல்துறையினர்களை  பாதுகாப்புக்கு வைக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆர்பாட்டத்தில் தொல்.திருமா அவர்கள் பேசும்பொழுது

 தேர்தல் அரசியலில் நாம் எந்த அணியில் இருந்து இருந்தாலும் சாதி வன்கொடுமைகளை எதிர்க்கிற களத்தில் நாம் அனைவரும் இணைந்து நிற்போம் என்று வழியுறுத்தினார்.அத்துடன் தலித் வேட்பாளர்களுக்கும் ,வெற்றிப்பெற்ற தலித் உள்ளாட்சி மன்ற தலைவர்களுக்கும் அரசு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்,மேலவளவு முருகேசன்,ஜக்கன்,சேர்வாரன் இப்படி தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் படுகொலை செய்யப்படுவது தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது,சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவரை கொலை வெறியர்கள், சாதிவெறியர்கள், தேடிக்கொண்டு இருகின்றனர்.முருகன் கிடைக்கவில்லை என்ற நிலையில் அவருடைய தம்பியை படுகொலை செய்துள்ளனர் அதேபோல தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு கடந்த 5 ஆண்டுகளாக இருக்கையில் அமரமுடியவில்லை, இப்படி உள்ளாட்சி அமைப்புகளில் சாதிவெறியாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது என்று தொல்.திருமா அவர்கள் தனது பேச்சியில் குறிப்பிட்டார்.

தமுமுக தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் பேசும்பொழுது:அருந்ததியர்கள் ஒற்றுமையாக இல்லாமல் இருக்கிற காரணத்தினால் தான் இவ்வாறு பாதிக்கபடுகின்றனர் என்றும் தேவேந்திரர்கள் மற்றும்  பறையர்களை போல அருந்ததியர்களும் எழுச்சிபெற வேண்டும் அப்போதுதான் வன்கொடுமைகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார் மேலும் தம்பி திருமா நானும் இனி எங்கே வன்கொடுமை நடந்தாலும் அங்கு உடனே  வந்து குரல் கொடுப்போம் என்று கூறினார். விடுதலைச்சிறுத்தைகள் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியாக அதே வேளையில் எழுச்சியாகவும் அரங்கேறியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக