சின்னத்திரைக் கலைஞர்கள் பங்கேற்பு: விடுதலைச்சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கையில் சிங்களர்களின் வெற்றித்திருவிழா
தமிழகத்திலிருந்து சின்னத்திரை க் கலைஞர்கள் பங்கேற்பு: விடுதலைச்சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் அறிவிப்பு
தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து ஓராண்டுகாலம் நிறைவடைய உள்ளது. சுமார் 50,000 தமிழர்களும் விடுதலைப்புலிகளும் புலிகளின் தளபதிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழிக்கப்பட்ட மனித அவலத்தை சிங்களர்களின் வெற்றித் திருவிழாவாக எதிர்வரும் மே 18 அன்று கொண்டாடுவதற்கு சர்வதேசப் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சேக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மே 12லிருந்து மே 20 வரையில் இலங்கை முழுவதும் குறிப்பாக, தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளெங்கும் சிங்களவர்களின் வெற்றிப் பேரணி மற்றும் இசை நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்திட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை கொன்றொழித்த நாளாகவும் அந்த நாள் சிங்களவர்களின் வெற்றித் திருநாள் எனவும் வெளிப்படையாக அறிவித்து மே 18 அன்று மாபெரும் பேரணியையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இத்தகைய வேதனைகள் நிறைந்த செய்திகளுக்கிடையில் கொடுமையிலும் கொடுமையாக தமிழர்களே இந்த ‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் என்னும் செய்தி கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமிழகத்திலிருந்து இசைக்குழுவினரும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக்குழுவினரும் வரும் மே 12ம் தேதியிலிருந்து பங்கேற்க உள்ளனர் என்பது சகித்துக்கொள்ள முடியாத வேதனையை அளிக்கிறது.
காசுக்காக, கூலிக்கு மாரடிக்கும் கும்பலைப்போல் இத்தகைய இசை மற்றும் கலைக்குழுவினர் சிங்கள இனவெறியர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்குச் செல்வது மிகவும் வெட்கக்கேடான தலைகுனிவான இழி செயலே ஆகும். இதனால் தமிழகத்தைச் சார்ந்த ஒட்டுமொத்தத் தமிழர்களும் மாபெரும் களங்கத்தைச் சுமக்கவேண்டி வரும். இனமான உணர்வுகள் இல்லாமல் வெறும் பிழைப்புவாதப் போக்குகளைக் கொண்ட இவர்கள் தமிழினப் பகைவர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் துணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இந்நிலையில், இனமானத்தைக் காக்கும் வகையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீதான களங்கத்தைத் துடைக்கும் வகையில், சிங்களவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்; முற்றிலுமாக இப்பயணத்தை கைவிட வேண்டும். இல்லையேல் காலகாலத்திற்கும் இந்த அவமானத்தை துடைத்தெறியவே முடியாது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த இசை மற்றும் கலைக்குழுவினர் முள்ளிவாய்க்காலின் பேரவலத்தை எண்ணிப்பார்த்து இந்தப் பயணத்தை முற்றிலும் கைவிட வேண்டுமென்று விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 10.5.2010 அன்று எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்தில் தமிழின உணர்வுள்ள அனைவரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக