குமுளி நோக்கி தொல். திருமாவளவன் தலைமையில் விசிக நடைபயணம் - தொல். திருமா அறிக்கை


முல்லைப் பெரியாறு குறித்து கேரள ஆட்சியாளர்களும்,கேரள அரசியல்வாதிகளும் திட்டமிட்டு உருவாக்கிவரும் பதற்றநிலையை இப்போது உச்சநீதிமன்றம் சற்றே தணித்திருக்கிறது . அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது தமிழக மக்களுக்குச் சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும்,


  • அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் முன்னர் சொன்ன தீர்ப்பை மறுஉறுதி செய்யவேண்டும். 
  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப் பகுதிகளில் கேரளத்தவர் செய்திருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும்.
  • அணைக்குப் பாதுகாப்பாக  மத்திய பாதுகாப்புப் படையை( சி.ஐ.எஸ்.எஃப்  ) நிறுத்தவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு ஏற்கவேண்டும். 
  • இந்த சிக்கலின் தீவிரத்தன்மையை உணர்ந்து நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அவர்களின் தலைமையிலான குழு தனது அறிக்கையை விரைந்து தாக்கல்செய்யவேண்டும்.
  • கேரளாவில் இருக்கின்ற தமிழ்மக்களின் உயிர்களுக்கும்,உடைமைகளுக்குமான பாதுகாப்புக்கு மத்திய அரசு பொறுப்பேற்கவேண்டும்.
  • தமிழ்நாட்டின் உரிமையைக் காப்பதற்காகத் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தமிழக அரசு தொடுத்திருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்.
 என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பிரச்சனையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக எதிர்வரும் 16.12.2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தேனியிலிருந்து குமுளி நோக்கி எனது தலைமையில் நடைப்பயணம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்மக்கள் திரளாகப் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். 
  • நாளை (15.12.2011)  நடைபெறும் தமிழக சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைத் தொடர்ந்து, தனது தலைமையில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்துத் தமிழகத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். 
இவண் 

( தொல்.திருமாவளவன்) 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக