ராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்: திருமாவளவன் வேண்டுகோள்
சர்வதேசப் போர்க்குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை
சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்!
கரும்புலி முத்துக்குமார் பாசறையை தொடங்கி வைத்து
தொல். திருமாவளவன் வேண்டுகோள்
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென கடந்த சனவரி 29, 2009அன்று தீக்குளித்து உயிர்நீத்த முத்துக்குமார் நினைவாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளான நேற்று (18-05-2010) "கரும்புலி முத்துக்குமார் பாசறை" எனும் அமைப்பு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் தொடங்கப்பட்டது.
சென்னை, சேப்பாக்கம், அண்ணா அரங்கத்தில் மாலை 7 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் முத்துக்குமார் மற்றும் ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த போராளிகள், முல்லைத் தீவில் சிங்கள இராணுவத்தால் படுகொலையான புலிகள் மற்றும் பொதுமக்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கரும்புலி முத்துக்குமார் படத்தைத் திறந்து வைத்து ஈகச்சுடர் ஏற்றி வைத்தார். மையச் சென்னை மாவட்டச் செயலாளர் வீரமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முத்துக்குமார்: உயிர்மூட்டி தீ கொடுத்தவன் என்னும் முத்துக்குமார் பற்றிய நூல் தொகுப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் வெளியிட இசைஇயக்குநர் சங்கர் கணேஷ் பெற்றுக்கொண்டார்.
"தன்மானத் தமிழ்ப் புலி' எனும் இசைப்பேழையினை கட்சியின் பொதுச் செயலாளர் கா. கலைக்கோட்டுதயம் வெளியிட ஈழத் தமிழருக்காக தீக்குளித்து வீரச்சாவடைந்த அப்துல் ரவூப்பின் தாயார் திருமதி சவுதா அசன்முகமது பெற்றுக்கொண்டார்.
ஈழத் தமிழருக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த சென்னை அமரேசன் குடும்பத்திற்கு ரூ. 25,000மும், அப்துல் ரவூப் குடும்பத்திற்கு ரூ. 50,000 குடும்பப் பாதுகாப்பு நிதியாக வழங்கப்பட்டது.
மறைந்த அமரேசனின் மகன்கள் சங்கரலிங்கம், வெங்கடேசன் அப்துல் ரவூப்பின் தாயார், சகோதரர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டது.
அப்துல் ரவூப்பின் தாயார் வழங்கப்பட்ட நிதியை ரவூப் பெயரால் நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் திருப்பிக் கொடுத்தார். திருமதி சவுதா அவர்களின் கோரிக்கையை ஏற்று அப்துல் ரவூப் சொந்த ஊரான பெரம்பலூரிலேயே அப்துல் ரவூப் நூலகம் ஒன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் உருவாக்கப்படும் என்று திருமாவளவன் உறுதியளித்தார். இந்நிகழ்வில் தொல். திருமாவளவன் முத்துக்குமார் குறித்து எழுதி பாடிய பாடல் பின்னணி காட்சிகளுடன் ஒளிபரப்பப்பட்டது.
நிறைவாகப் பேசிய தொல். திருமாவளவன், ""கரும்புலி முத்துக்குமார் கண்ட கனவை நனவாக்கும் வகையில் தமிழீழ விடுதலை அரசியலை அடைகாப்பதே இப்பாசறையின் முதன்மையான நோக்கமாகும். கரும்புலிகள் முத்துக்குமார், அப்துல் ரவூப் உள்ளிட்ட தமிழகத்தில் களப்பலியானோரின் பெயர்களில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே படிப்பங்கள் உருவாக்கப்படும்'' என்று குறிப்பிட்டார். மேலும் சர்வதேசப் போர்க் குற்றவாளிகளான இராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், கா.கலைக்கோட்டுதயம், முகமது யூசுப், மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், இரா. செல்வம், ஆதிரை, நீல.தமிழேந்தி, எழில் கரோலின், யாழினி, துபை சங்கத்தமிழன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவண்
வன்னிஅரசு
-
1 கருத்துகள்:
குணங்குடி அனிபா விடுதலை: திருமா வாழ்த்து
http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=527:kunangudi-hanifa-tiruma&catid=93:kunangudi-hanifa&Itemid=358
கருத்துரையிடுக